நாயகன் சசிகுமார் தனது மனைவியுடன் கோவில்பட்டியில் வாழ்ந்து வருகிறார். மத்திய மந்திரியாக இருக்கும் ஆஷா சரத் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து அவருக்கு உடனடியாக மாற்று சிறுநீரக சிகிச்சை தேவைப்படுகிறது. அவருடைய ரத்தவகை மிகவும் அரிய வகை என்பதால் நீண்ட தேடலுக்கு பிறகு சிறுநீரக தானத்திற்கு 2 பேரை தேர்வு செய்கிறார்கள். அதில் ஒருவர் சசிகுமார். ஆஷா சரத்தின் உடல்நிலை வெளியுலகிற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என அறுவை சிகிச்சையை ரகசியமாக நடத்த திட்டமிட்டு சசிகுமாரை அழைத்து வர முயற்சியில் ஆஷா சரத் குழு முயற்சி செய்கிறது. அதே சமயம் கோவில்பட்டியில் பல பிரச்சனைகளுடன் போராடி வரும் சசிகுமார் சிறுநீரகம் கொடுக்க மறுப்பு தெரிவிக்கிறார். இறுதியில் சசிகுமார் சிறுநீரகம் கொடுத்தாரா? சசிகுமாருக்கு இருக்கும் பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
அப்பாவியான முகம், சோகம் நிறைந்த வாழ்க்கை, வெள்ளந்தி சிரிப்பு என்று சசிகுமாருக்கு பொறுத்தமான கதாபாத்திரம் என்பதால், அவர் திரையில் தோன்றினாலே பார்வையாளர்கள் மனம் கனத்துவிடுகிறது. அதிகார வர்க்கத்தினால் பாதிக்கப்படும் சாமானியர்களை தனது உடல் மொழிகளால் பிரதிபலித்திருக்கும் சசிகுமாரின் நடிப்புக்கு பலே. சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சைத்ரா ஜே.ஆச்சார், இயல்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்ப்பதோடு, தந்தை ஆவியின் மூலம் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆஷா சரத், அதிகார திமிரை தனது கண்கள் மூலமாகவே வெளிப்படுத்தி மிரட்டுகிறார். படுக்கையில் இருந்தாலும், தனது கதாபாத்திரத்தின் பலம் அறிந்து நடித்திருக்கும் அவரது நடிப்புத் திறன் வியக்க வைக்கிறது. பத்திரிகையாளராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், அடிபட்டு, மிதிபட்டாலும் எதற்கும் விலை போகாமல் நியாயம் பக்கம் நிற்கும் நல்ல மனிதர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்திற்கு தனது சிறப்பான நடிப்பின் மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார்.

நீதிபதியாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞராக நடித்திருக்கும் இயக்குநர் கோபி நயினார், வட்டி தொழில் செய்யும் வசுமித்ரா என பரிட்சயமான முகங்களும், நடித்த பரிட்சயம் இல்லாத சில முகங்கள் என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் பார்வையாளர்கள் மனதில் தங்கி விடும் அளவுக்கு இயல்பாக பயணித்திருக்கிறார்கள். பிரமாண்டம், வண்ணமயமான காட்சிகளை மட்டுமே படமாக்கி வந்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, எளிய மனிதர்களின் வாழ்வியலை எதார்த்தமாக காட்சிப்படுத்தி, இயக்குநர் ராஜு முருகனின் கதை சொல்லலுக்கு பலம் சேர்த்திருக்கிறார். எந்த இடத்திலும் தனக்கான தனித்துவத்தை வெளிப்படுத்தாமல், இயக்குநரின் பார்வைக்கு ஏற்ப தனது கேமராவை பயணிக்க வைத்திருக்கும் நீரவ் ஷாவின் பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் எளியோரின் வலியை சொல்லும் விதமாக பயணித்திருக்கிறது. பின்னணி இசையும் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களில் ஒன்றாக பயணித்து திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரூட்டியிருக்கிறது.படத்தின் நடு நடுவே சில தொய்வுகள் தெரியும் வகையில் படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன், காட்சிகளை தொகுத்தாலும், இடைவேளை மற்றும் அதற்கு பிறகான படத்தை வழக்கமான சினிமா சுவாரஸ்யத்தோடு நகர்த்தி பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்து விடுகிறார். எழுதி இயக்கியிருக்கும் ராஜுமுருகன், எளியவர்களின் வாழ்வின் மூலம் அதிகார வர்க்கத்தினருக்கும், அரசு இயந்திரத்தின் முரண்பாடுகளுக்கும் சம்மட்டியடி கொடுத்திருக்கிறார். தனது வசனத்தின் மூலம் சமூக அவலங்களை தோலுறித்திருப்பதோடு, அதை சரி செய்யும் அரசு இயந்திரத்தின் கோளாறுகளை நகைச்சுவையாக சுட்டிக்காட்டி சிரிக்க வைக்கிறார். சசிகுமாருக்கு எதிராக நடக்கும் சதி திட்டங்களால், சாதாரண மனிதர்களுக்கு நிகழப்போகும் முடிவு தான் ஏற்பட போகிறது, என்ற பதற்றத்தோடு படம் நகர்ந்தாலும், எதிர்பார்க்காத திருப்பத்தோடு அமைக்கப்பட்டிருக்கும் கிளைமாக்ஸ், எளியவர்களின் குரலை வலிமையாக ஒலிக்கச் செய்யும் இயக்குநர் ராஜு முருகனின் தொடர் முயற்சிக்கான பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
