ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘இருமுடி கட்டு’. சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய்குமார், பேபி நக்ஷத்ரா, ரமேஷ் இந்திரா, ஸ்வஸிகா விஜய், மீசாலா லக்ஷ்மண், அஜய் கோஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவி சங்கர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தொடர் தோல்வியால் துவண்டிருந்த ரவி தேஜாவுக்கு, ‘இருமுடி கட்டு’ எந்த அளவுக்கு கைகொடுத்துள்ளது? சிவா நிர்வாணாவின் இயக்கம் ரசிகர்களை கவர்ந்ததா? ரவி தேஜாவின் இந்தப் படம் அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றதா என்பதை விமர்சனத்தில் விரிவாக பார்க்கலாம்.

பொல்லூரு கிராமத்தில் திரிநாத் (ரவி தேஜா), தன் மனைவி காவேரி (பிரியா பவானி சங்கர்), மகள் மணியம்மாவுடன் (பேபி நக்ஷத்ரா) சந்தோஷமாக வாழ்கிறார். ஆட்டோ ஓட்டி, வாழைத்தோட்டம் நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு மாலை போடும் தீவிர பக்தர். மாலை போட்டிருக்கும்போது மதுவைத் தொடமாட்டார், ஆனால் மாலை கழற்றியதும் குடிப்பார். மகள் மீது உயிரையே வைத்திருக்கிறார். அந்த ஊருக்கு எம்.எல்.ஏ (ரமேஷ் இந்திரா) ஒரு பேருந்து வசதி செய்து தருகிறார். அதன் பிறகு நடக்கும் திடீர் மரணம், மர்மமான சம்பவங்கள்தான் படத்தின் கதைக்களம்.
ரவி தேஜா படம் என்றாலே மாஸ், காமெடி, ஆக்ஷன் என அனைத்தும் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ரவி தேஜா தெரியவில்லை, திரிநாத் என்ற கதாபாத்திரமாக தான் தெரிகிறார். அந்த அளவுக்கு நடிப்பில் ஒன்றிப்போயிருக்கிறார். அப்பா-மகள் சென்டிமென்ட் காட்சிகளில் இயக்குநர் சிவா நிர்வாணா நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார். சில த்ரில்லிங் திருப்பங்கள் இருந்தாலும், க்ளைமாக்ஸ் யூகிக்கக்கூடியதாக இருப்பது ஒரு மைனஸ். ஆனாலும், சிவா நிர்வாணாவின் எமோஷனல் மேக்கிங் படத்தை தூக்கி நிறுத்துகிறது.

