இறந்து போன காதலியின் நினைவாக திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறார், நிவின் பாலி. அவரது பக்கத்துக்கு வீட்டுக்கு வரும் கல்லூரி மாணவி மமிதா பைஜூ, நிவின் பாலியை காதலிக்க தொடங்குகிறார். ஆரம்பத்தில் வயது வித்தியாசம் என்று விலகி போகும் நிவின் பாலி, ஒருகட்டத்தில் மமிதா பைஜூவின் அன்பில் மையம் கொள்கிறார். காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். தனது மகளை கல்லூரி படிப்பு முடிந்ததும் வெளிநாடு அனுப்பலாம் என்று திட்டமிட்டிருந்த மமிதா பைஜூவின் குடும்பத்தாருக்கு, இந்த காதல் விவகாரம் தெரியவர பிரச்சினை வெடிக்கிறது. மமிதா பைஜூவை வலுக்கட்டாயமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். வெளிநாடு சென்ற மமிதா பைஜூ என்ன ஆனார்? அவரை நினைத்து வாழும் நிவின் பாலியின் கதி என்ன? இவர்களின் காதல் கைகூடியதா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
காதலிக்கும் தனக்கும் இருக்கும் வயது வித்தியாசதை தன் உடல்மொழி மூலம் வெளிப்படுத்துவது, குறும்புக்கார இளம்பெண்ணின் செயல்களினால் வெட்கப்படுவது, மீண்டும் ஒரு காதல் தோல்வியினால் கலங்குவது, என்று பல்வேறு உணர்வுகளை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் நிவின் பாலி, முழு படத்தையும் தன் பன்பட்ட நடிப்பின் மூலம் சுமந்திருக்கிறார்.
குறும்புக்கார கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் மமிதா பைஜு தனது சுட்டித்தனமான நடிப்பு மற்றும் உடல்மொழி மூலம் கவர்கிறார். காதலனுக்கும் தனக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்றாலும், அதைப் பற்றி யோசிக்காமல் காதலை அவர் கையாளும் விதம் ரசிக்க வைக்கிறது.

நிவின் பாலியின் தம்பியாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், பிந்து பணிக்கர், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஸ்ரிந்தா, ஷமீர் கான், மீனாட்சி ரவீந்திரன், அயசங்கர் கரிமுட்டம், தங்கம் மோகன், வெட்டுக்கிளி பிரகாஷ் என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது திரையிருப்பு மூலம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு, கதை பயணிக்கும் நகரம், அங்கிருக்கும் தேவாலயம், அருகருகே இருக்கும் வீடுகள் என்று காதலையும், காமெடியையும் கடந்து கதைக்களத்தையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
ஷ்ணு விஜய் இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் காதல் உணர்வுகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. வசனங்களால் சொல்ல முடியாத பல உணர்வுகளை இசை மூலம் சொல்லியிருக்கிறார்.
ஒரு காதல் கதையை இப்படியும் சொல்லலாம், என்ற புதிய பாதையில் பயணித்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆகாஷ் ஜோசப் வர்கீஸின் பணி சிறப்பு.

கிரிஷ்.ஏ.டி மற்றும் கிரண் ஜோசி ஆகியோரது கதை, திரைக்கதை எளிமையானதாக இருந்தாலும், அதில் சொல்லப்பட்டிருக்கும் உணர்வுப்பூர்வமான விசயங்கள் வலிமையானதாக இருக்கிறது. அதிலும் அதை வழக்கமான பாணியில் சொல்லாமல் சிரிக்கும்படியும், காதலை மனம் தொடும்படியும் சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
இயக்குநர் கிரிஷ்.ஏ.டி, சாதாரணமான காதல் கதையை, சாதாரணமான காட்சியமைப்பின் மூலம் சொல்லியிருந்தாலும், அவை பார்வையாளர்கள் மனங்களை தொடும்படியும், ரசித்து மகிழும்படியும் சொல்லியிருக்கிறார்.
