
கேரளாவில் நல்லாட்சி தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டொவினோ தாமஸ், ஊழலில் திளைத்து மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார். தந்தை மறைவுக்கு பிறகு அவரது செயல்பாடுகள் மோசமடைகிறது. தன் மீதான வழக்கு விசாரணைகளில் இருந்து தப்பிக்க மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி சேருகிறார். தன் சொந்த கட்சியில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்குகிறார். இதனால் அவரது சகோதரி மஞ்சு வாரியர் வெறுப்பு கொள்கிறார். மக்களும் அரசுக்கு எதிராக திரள்கிறார்கள்.
இன்னொரு புறம் சர்வதேச அளவில் போதை கும்பலின் அக்கிரமங்கள் அதிகரித்து வருகிறது. இந்த அக்கிரமங்களை தடுத்து நிறுத்த முந்தைய பாகத்தில் நல்லாட்சிக்கு காரணமாக நின்று, தற்போது நிழல் உலக தாதாவாக இருக்கும் மோகன்லால் மீண்டும் வரவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மோகன்லால் மீண்டும் நிழல் உலகில் இருந்து வெளியே வந்தாரா? ஆட்சியில் நடைபெறும் அத்துமீறல்களையும், சமூகத்தில் நடக்கும் போதைப்பொருள் நடமாட்டத்தையும் ஒழித்தாரா, இல்லையா? என்பதே பரபரப்பான மீதி கதை.
முதல் பாகத்தில் மாநில அரசியல் பேசிய இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், இந்த இரண்டாம் பாகத்தில் தேசிய அரசியலுடன், கேரளா போன்ற மாநிலங்களை ஆக்கிரமிக்க திட்டமிடும் தேசிய கட்சிகளின் நடவடிக்கை மற்றும் மத அரசியலின் பாதிப்புகள் பற்றி பேசியிருப்பதோடு, அதை பான் இந்தியா ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் மிக பிரமாண்டமாகவும், ஸ்டைலிஷாகவும் கையாண்டிருக்கிறார்.
குரேஸி ஆப்ராம் என்கிற ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன்லாலுக்கு பெரிய அளவில் நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும், படம் முழுவதும் ஸ்டைலிஷாகவும், மாஸாகவும் வலம் வருகிறார். முதல் பாகத்தில் மோகன்லாலின் சேவகனாக ஒருசில சண்டைக்காட்சிகளில் எண்ட்ரிக்கொடுக்கும் பிரித்விராஜ் சுகுமார், சையத் மசூத் என்ற கதாபாத்திரம் மூலம் அழுத்தமான கதை ஒன்றை அமைத்து, அதன் மூலம் தனது கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிய செய்திருக்கிறார். மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், அபிமன்யு சிங், இந்திரஜித் சுகுமாரன், கிஷோர், சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக, தங்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், ஒவ்வொரு ஃபிரேம்களையும் பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் மற்றும் வெளிநாட்டு காட்சிகளை கையாண்ட விதம் ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது.
இசையமைப்பாளர் தீபக் தேவின் பின்னணி இசை மாஸான காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்தாலும், சில இடங்களில் அதிக்கப்படியான சத்தத்துடன் வழகமான மசாலா படங்களை நினைவூட்டும் வகையிலும் பயணித்துள்ளது.
கதாபாத்திரங்களின் அறிமுகமே சுமார் ஒரு மணி நேரத்தை ஆட்கொண்டாலும், முழுப்படமும் மூன்று மணி நேரமாக இருந்தாலும், படம் தொய்வின்றி நகரும்படி காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன். 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தோடு தொடங்கும் கதையை, ‘லூசிஃபர்’-ன் தொடர்ச்சியாக கையாண்ட விதம், மோகன்லாலின் நிழல் உலகத்தையும், அதன் நடவடிக்கைகளையும் காட்சிப்படுத்திய விதம் மற்றும் கதாபாத்திரங்களை கையாண்ட விதம் என படம் முழுவதையும் மிக பிரமாண்டமாக கையாண்டிருக்கும் இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், தற்போதைய கேரள அரசியல் மற்றும் தேசிய அரசியலையும், மத பிரச்சனைகளையும் மிக சாமர்த்தியமாக கையாண்டு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார்.
படத்தின் செலவுகள் அனைத்தும் காட்சிகளில் தெரிவது போல் ஹாலிவுட் தரத்தில் படமாக்கியிருந்தாலும், உள்ளூர் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக வழக்கமான ஹிரோயிஷ சண்டைக்காட்சிகளை வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம். முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியால் இரண்டாம் பாகத்தை பான் இந்தியா கதையாகவும், சர்வதேச தரத்திலும் சொல்ல முயற்சித்தி அதில் இயக்குநர் பிரித்விராஜ் சுகுமார் வெற்றி பெற்றிருந்தாலும், திரைக்கதையாசிரியர் முரளி கோபியின் பலவீனமான திரைக்கதை பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த தவறியிருக்கிறது.