மதுரையில் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலம் மிக்கவராகவும், பிரபல ரவுடியாகவும் இருக்கிறார் ‘பருத்திவீரன்’ சரவணன். இவரது மகன் கஞ்சா கடத்தியதாக காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார். விசாரணை என்ற பெயரில 4 போலீஸ்காரர்கள் சேர்ந்து சரவணனின் மகளை கடுமையாக தாக்குகிறார்கள். பின்னர் தான் அவர் யாருடைய மகன் என்பது போலீஸ்காரர்களுக்கு தெரிய வருகிறது. இதனால், அவரை யாருக்கும் தெரியாமல் தூக்கிக்கொண்டு போய் காட்டுக்குள் விட்டுவிடுகின்றனர். ஆனால், அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடப்பதை அறிந்து போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். தனது மகன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட உண்மையும் அவரது தந்தைக்கு தெரிந்து விடுகிறது. இதனால், தன் மகனை கொலை செய்த காவலர்களை பழிவாங்க துடிக்கும் சரவணன், சம்மந்தப்பட்ட காவலர்களின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய தொடங்குகிறார். மறுபக்கம், உண்மையான கொலை குற்றவாளியையும், கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடித்து, காவலர்கள் மீதான சரவணின் பழி வாங்கும் நடவடிக்கைகளை தடுக்க முயற்சிக்கிறது. இறுதியில் சரவணனின் மகனை கொலை செய்தது யார் ?, பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜா மலைசாமி, காவல்துறையினரின் எண்ணங்களையும், அவர்களது பழிவாங்கும் குணங்களையும் தன் நடிப்பின் மூலம் பிரதிபலித்திருப்பதோடு, ஒரு தந்தையாக தன் மகள்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்டு கதறும் காட்சிகளில் கலங்கும்படி நடித்திருக்கிறார். புதுமுகம் என்றாலும் எந்தவித தடுமாற்றமும் இன்றி நடித்திருப்பவர் தனது கதாபாத்திரத்திற்கு தன் நடிப்பு மூலம் பெரும் பலம் சேர்த்திருக்கிறார். மகன் மீது பேரன்பு கொண்ட கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் சரவணனின், அனுபவம் வாய்ந்த நடிப்பும், அதிரடியான நடவடிக்கையும் திரைக்கதையை வேகமாக நகர்த்திச் செல்ல பயன்பட்டிருக்கிறது. சாதாரண வேடமாக அறிமுகமானாலும் திரைக்கதையின் திருப்பத்திற்கான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார் காதல் சுகுமார். கதாநாயகியாக நடித்திருக்கும் நிஷா தூபே கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். சுரேகா.ஆர், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.ஜெயகுமார் தங்கவேலின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும், கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, நடிகர்களின் நடிப்பு திறனை சரியான முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஜெயா கே.தாஸின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் தனித்துவம் இல்லை என்றாலும், திரைக்கதையின் ஓட்டத்திற்கு உயிரூட்டும் வகையில் பயணித்திருக்கிறது.
எம்.எஸ்.செல்வாவின் படத்தொகுப்பு திரைக்கதையில் இருக்கும் சஸ்பென்ஸையும், அதன் மூலம் ஏற்படும் எதிர்பார்ப்பையும் இறுதி வரை பயணிக்க வைத்து படத்தை படபடப்போடு பார்க்க வைக்கிறது. காவல்நிலைய மரணங்களை பின்னணியாக கொண்டு, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் கதையை நேர்த்தியாக கொடுத்திருக்கும் இயக்குநர் பாலு.எம், எதிர்பார்க்காத திருப்பங்களை யூகிக்க முடியாதபடி சொல்லி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார். பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகளால் கதையை காட்சி மொழியில் விவரித்ததில் சில குறைகள் இருந்தாலும், தான் எடுத்துக் கொண்ட கதையை தொய்வில்லாத திரைக்கதையோடு, விறுவிறுப்பான காட்சியமைப்புகள் மூலம் ஒரு நிறைவான பொழுதுபோக்கு படமாக கொடுத்து இயக்குநர் பாலு.எம் வெற்றி பெற்றிருக்கிறார்.
