
ஆதி (ராஜீவ் கோவிந்த்) யாமினியை உயிருக்கு உயிராக காதலிக்கிறார். ஒரு சம்பவத்திற்குப் பிறகு யாமினி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள். தனது காதலியான யாமினியின் இழப்பு உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்டு ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியுள்ளார் ஆதி. ஆதியின் நிலையைப் பார்த்து, அவரது மருத்துவ நண்பர் அவருக்கு ஒரு மறதி நோய் சிகிச்சை அளிக்கிறார், அது வலிமிகுந்த அல்லது அதிர்ச்சிகரமான நினைவுகளை மறக்கவும், அந்த துக்கத்திலிருந்து மீளவும் உதவும். அவர் குணமடைந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கும் போது, அவர் தனது பால்ய நண்பர் புவியுடன் மீண்டும் இணைகிறார். பழைய நினைவுகளை இழந்த ஆதியை புவி ஆறுதல்படுத்துகையில், அவர்கள் ஆதியின் காதலியைப் பற்றி அவளிடம் சொல்லும்போது, தனது காதலியைக் கொன்றது யார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார், மேலும் புவியைப் பற்றி கேட்கும் போது, புவியின் குடும்பம் ஒரு இரக்கமற்ற ஆபத்தானவரால் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் அறிகிறார். ஒரு கட்டத்தில் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்த போது ஆதியும் புவியும் அதிர்ச்சி அடைகிறார்கள். அது சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனான பிறகு ஒவ்வொருவரையும் தேடி கண்டுபிடித்து கொலை செய்யும் மனநோயாளி சாதிக் (அபிஷேக் ஜார்ஜ்). சாதிக் பிடியில் மாட்டி இருக்கும் ஆதி மற்றும் புவியிடம் தன்னுடைய இருண்ட ரகசியங்களை அம்பலப்படுத்துகிறார். மற்றும் யாமினியின் உயிரைப் பறித்த கொலை உட்பட மற்ற தொடர் கொலைகளின் கொடூரமான வலையை அவிழ்க்கிறான். கொலைகளுக்குப் பின்னால் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மை என்ன? புவியின் பெற்றோர் யார்? எதற்காக பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தார்? ஆதி, புவி, சாதிக் என்ன ஆனார்கள்? போன்ற கேள்விகளுக்கு டெக்ஸ்டர் பதில் சொல்லும்.
நாயகன் ராஜீவ் கோவிந்த்துக்கு அட்டகாசமான உடற்கட்டு. முன்கோபியான அவர் அந்தக் காரணத்தினால் நிறைய எதிரிகளை சம்பாதித்து வைத்திருப்பது பொருத்தமாக இருக்கிறது. காதலியை இழந்த துக்கத்தையும் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு சரியான ஜோடியாக அமைந்திருக்கிறார் யுக்தா பெர்வி. அவரது வனப்புக்கேற்ற ஆடைகளும் இரட்டிப்பு அழகைத் தருகின்றன.
இதுவரை எந்த சினிமாவும் பார்க்காத சைக்கோ வில்லனாக வருகிறார் அபிஷேக் ஜார்ஜ். நடிப்பிலும் அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். ஆனாலும் சித்தாரா விஜயனைக் கட்டிப்போட்டு விட்டு லுங்கியை அவிழ்த்து காண்பிப்பதெல்லாம் கொஞ்சம் குரூரம்தான்.ஹரிஷ் பெராடியின் அறிமுகம் அவரைப் பெரிய வில்லனாக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால் கடைசியில் அவரும் பாதிக்கப்பட்டவராக வாத்து பரிதாபத்தை சம்பாதிக்கிறார்.
இவர்களுடன் அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன் அனைவரும் சரியான விதத்தில் பங்களித்து இரக்கிறார்கள். ஆதித்ய கோவிந்தராஜின் ஒளிப்பதிவு அழகுக்கு அழகு சேர்த்தும், உளவியல் சிக்கலுக்கு ஒத்துழைத்தும் இருக்கிறது. ஸ்ரீநாத் விஜய் இசையில் மோகன்ராஜன் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. இந்தச் சின்ன பிரச்சனைக்கு எல்லாமா கொலை செய்வார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டாலும், உளவியல் சிக்கல் ஒரு மனிதனை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று புரியவும் வைக்கிறது. 2006 ம் ஆண்டில் ஒளிபரப்பான ஒரு அமெரிக்கத் தொடரில் வந்த சைக்கோபாத் கேரக்டரின் பெயர்தான் டெக்ஸ்டர் மார்கன் என்பது. அந்த பாதிப்பில் அதனை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சூரியன்.ஜி.