
எழுத்தாளரான வாசன், மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார். முதல் தொடரில், தனபால் எனும் ரெளடி தனது 50 ஆவது கொலையைச் செய்துவிட்டு, அத்தொழிலில் இருந்து விடுபட நினைக்கிறார். இரண்டாவது தொடரில், மருத்துவராக நினைக்கும் பள்ளி மாணவியான ராஜிக்கு நீட் தேர்வு பிரச்சனையில் சிக்குகிறார். மூன்றாவது தொடரில், செல்வியெனும் வேலைக்காரப் பெண்ணின் மீது இரண்டாயிரம் ரூபாய் திருடியதாகப் பழி விழுகிறது. கற்பனையில் எழுதிய கதாபாத்திரங்கள் உயிர் பெற்று வந்து, எழுத்தாளர் வாசனை சந்திக்கின்றன. எங்களை இப்படி தவிக்க விடலாமா… கதையை மாற்றுங்க என எழுத்தாளரை மிரட்டுகின்றன. அவர் மறுக்கிறார். உண்மைக்கும், பேண்டசிக்கு நடுவில் வாசன் தவிக்கிறார். இறுதியில் வாசன், அவர் எழுதி வந்த தொடர் கதைகளை மாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக எழுத்தாளர் வாசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாகராஜன் கண்ணன், தலைக்கணம் கொண்ட ஒரு எழுத்தாளராக நடிப்பில் அசத்தியிருக்கிறார். பதிப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டெல்லி கணேஷ், தனது அனுபவமான மற்றும் எதார்த்தமான நடிப்பு மூலம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். ரேகா குமனன், காயத்ரி, பேராசிரியர் மு.ராமசாமி, தீனா, முருகன் கோவிந்தசாமி, பிரகதீஸ்வரன், ஐஸ்வர்யா ரகுபதி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதையையும், தங்களது கதாபாத்திர தன்மையையும் முழுமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் அஞ்சனா ராஜகோபாலன், முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கும் இசையை கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன், தனது கேமராவை கதாபாத்திரங்களில் ஒன்றாக பயணிக்க வைத்திருக்கிறார். கதை மாந்தர்களின் இயல்பு தன்மையையும், எதார்த்தமான நடிப்பையும் எவ்வித கலப்படம் இன்றி காட்சிப்படுத்தி பாராட்டுப் பெறுகிறார். திரைக்கதைக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து படத்தொகுப்பு செய்திருக்கும் படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், தேவையில்லாத காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களை வெட்டி வீசியிருப்பது திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ஏ.ஆர்.ராகவேந்திரா மற்றும் எம்.ஸ்ரீனிவாசன் ஆகியோரது வித்தியாசமான கதைக்கரு மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை பார்வையாளர்களின் கனவத்தை எளிதாக ஈர்த்து விடுகிறது. ”இது சரி, இது தப்பு என்று நாம் நம்பும் அனைத்தும் ஏதோ ஒரு படைப்பாளி சொன்ன விசயம் தான், எனவே படைப்பாளிக்கு பொறுப்பு அதிகம்” உள்ளிட்ட பல வசனங்கள் மூலம் நாயகன் நாகராஜன் கண்ணன், வசனகர்த்தாவாகவும் கவனம் பெறுகிறார்.
கதையில் உள்ள கதாபாத்திரங்கள் நேரில் தோன்றினால் என்ன நடக்கும், என்ற வித்தியாசமான மற்றும் புதிய முயற்சியை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.ராகவேந்திரா, படத்துடன் பார்வையாளர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார். புதுமுக நடிகர்கள், அறிமுக தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் கதையாசிரியர்கள் என்று முழுக்க முழுக்க புதியவர்களாக இருந்தாலும், அவர்களது புதுமையான முயற்சியும், அதை திரை மொழியில் சொன்ன விதமும் ஒரு சிறந்த படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.