நண்பர்களுடன் சேர்ந்து எந்நேரமும் போதையில் மிதந்து கொண்டிருக்கும் ஹரிஷ், குடிப்பவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் திடீரென மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டால், மதுவையே வாழ்க்கையாக நினைத்துக் கொண்டிருக்கும் ஹரிஷின் நிலை என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் சுவாரசியமான கதை.
நாயகனாக நடித்திருக்கும் டாக்டர்.ஏ.ஹரிஷ், கல்லூரி மாணவர் போல் இளமையாக இருப்பதால், மது பிரியர் மற்றும் மதுக்கூடம் உரிமையாளர் கதாபாத்திரத்தில் ஒட்டாமல் பயணிக்கிறார். அதே சமயம், தனது கதாபாத்திரத்திற்கான நடிப்பை சரியான முறையில் வெளிப்படுத்தியிருப்பவர்,காமெடி காட்சிகளை கச்சிதமாக கையாண்டு சிரிக்க வைப்பதோடு, காதல் மற்றும் பாடல் காட்சிகளில் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். தனக்கு பொருந்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் தமிழ் சினிமா ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடிப்பார்.
நாயகியாக நடித்திருக்கும் தனலக்ஷ்மி, மது பிரியராக இருந்தாலும் ஹீரோவை விரட்டி விரட்டி காதலிக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். பாடல் காட்சிகளில் கூடுதல் அழகோடு வலம் வருகிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கல்கி ராஜா, காமெடி காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். தனக்கான தனித்துவமான செயல்பாடுகள், வசன உச்சரிப்பு மற்றும் மைண்ட் வாய்ஸ் மூலம் சிரிக்க வைக்கிறார்.
மொட்டா ராஜேந்திரன், ரமா, பிரியதர்ஷினி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுக்கான வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹரிஷ், கதைக்கு தேவையான விதத்தில் பணியாற்றியிருக்கிறார். வசனக் காட்சிகள் எளிமையாக இருந்தாலும், பாடல் காட்சியை இளமையாக படமாக்கி பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
சஹிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் பி.ஆர்.பிரகாஷின் பணியிலும் குறையில்லை.
எழுதி இயக்கியிருக்கும் பிரபுராம்.சி, தற்போதைய காலக்கட்டத்தில் மக்களிடம் அதிகரித்திருக்கும் மதுப்பழக்கத்தை மறக்கடிப்பதற்கான தீர்வை சொல்லியிருக்கிறார்.
”மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு” என்ற வாக்கியத்துடன் மது பாட்டில்களை விற்பனை செய்யும் அரசு, அந்த மதுக்கடைகளை முழுவதுமாக மூடினால் தான், மதுப்பழகத்தில் மூழ்கியிருக்கும் மக்களை மீட்டெடுக்க முடியும், என்பதை இயக்குநர் பிரபுராம்.சி, அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
ஒரு திரைப்படமாக சிறு முதலீட்டில் தான் சொல்ல நினைத்ததை சற்று சொதப்பலாக சொல்லியிருந்தாலும், சமூக பொறுப்புடன், நாட்டுக்கு மிக அவசியமான ஒரு கருத்தை, கமர்ஷியலாகவும், காமெடியாகவும் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பிரபுராம்.சி, தயாரிப்பாளர் ஏ.அழகு பாண்டியன், நாயகன் ஹரிஷ் ஆகியோரை மனதார பாராட்டலாம்.
