
“சட்டமும் நீதியும்” சுந்தரமூர்த்தி (சரவணன்) என்ற ஒரு வழக்கறிஞரை மையமாகக் கொண்டது. ஒரு வழக்கறிஞராக அவரது தொழில் வாழ்க்கை பெரிய வெற்றிகளைக் காணவில்லை. இதனால் அவருக்கு வீட்டிலும் மரியாதை இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் குப்புசாமி என்பவர் தனது மகள் காணாமல் போன வழக்கிற்கு நீதி கேட்டு நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை செய்து கொள்கிறார். இது சுந்தரமூர்த்தியை அதிகம் பாதித்து அவருக்கு நீதி வாங்கி கொடுக்க மீண்டும் வாதாட செல்கிறார். இளம் வழக்கறிஞர் அருணாவுடன் (நம்ரிதா எம்.வி.) இணைந்து இந்த வழக்கை விசாரனை செய்கிறார். ஒரு சிறிய வழக்காக இருக்கும் என்று நினைத்து, ஆனால் பிறகு இது பெரிய வழக்கு என்பது சரவணனுக்கு தெரிய வருகிறது. இறுதியில் என்ன ஆனது என்பதே சட்டமும் நீதியும் வெப் தொடரின் கதை.
வழக்கறிஞராக நடித்திருக்கும் சரவணன், மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். கருப்பு அங்கி போட்டு, நீதிமன்றத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசினாலும், அளவான நடிப்பு, இயல்பான உடல் மொழி மூலம் சுந்தரமூர்த்தி என்ற சாதாரண வழக்கறிஞர் வேடத்தை மிக கச்சிதமாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார் நடிகர் சரவணன்.
சரவணனின் உதவியாளராக நடித்திருக்கும் நம்ரிதா, தைரியம், துணிவு மிக்க பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவான நடிப்பு மூலம் பரபரப்பான திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுல்கிருஷ்ணன் நீதிமன்ற வளாகம், நீதிமன்ற வழக்கு விசாரணை என முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் பயணிக்கும் கதையாக இருந்தாலும், அதை பல்வேறு கோணத்தில் காட்சிப்படுத்தி அனைத்து எப்பிசோட்களையும் சலிப்பின்றி நகர்த்திச் சென்றிருக்கிறார். இசையமைப்பாளர் விபின் பாஸ்கர், பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையும் அளவாக கையாண்டிருக்கிறார். சாதாரண வழக்கறிஞராக சித்தரிக்கப்பட்டாலும், அந்த கதாபாத்திரத்தையும் தனது பீஜியம் மூலம் பல இடங்களில் மாஸாக காட்டியிருக்கிறார். திரைப்படங்களின் திரைக்கதை வேகமாக இருக்கும், ஆனால் முதல் முறையாக இணையத் தொடரின் திரைக்கதை படு வேமமாக பயணிக்கும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராவணன். ஏழு எப்பிசோட்கள் எப்படி முடிந்தது, என்று தெரியாத அளவுக்கு படுவேகமாக படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
கதையாசிரியர் சூர்யபிரதாப்.எஸ்-ன் கதையில், ஏற்கனவே வெளியான சில நீதிமன்ற கதையம்சம் கொண்ட படங்களின் சாயல் தெரிந்தாலும், திரைக்கதை மற்றும் திருப்பங்கள் மூலம் அதை வேறு ஒரு பாணியில் சுவாரஸ்யமாகவே நகர்த்தி சென்றிருக்கிறார். தொடரை இயக்கியிருக்கும் பாலாஜி செல்வராஜ், கடத்தப்பட்ட பெண், பிறகு 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி என திடீர் திருப்பம் மூலம் தொடரை வேறு பக்கம் பயணிக்க வைப்பவர், மீண்டும் அதே பெண் யார்? என்ற கேள்வியை பார்வையாளர்கள் மனதில் எழுப்பி, அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டி, அவளுக்கு என்ன நடந்திருக்கும், என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி, 7 எப்பிசோட்களையும் கண்கள் இமைக்காமல் பார்க்க வைத்திருக்கிறார்.