நாயகி இவானாவை காதலிக்கும் இளைஞர் கொலை செய்யப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அதன்பிறகும் அவரை திருமணம் செய்ய வரும் நபர்களுக்கு தொடர்ந்து மரணம் நிகழ்கிறது. இது சாதாரண சம்பவம் இல்லை என்பதை காவல்துறை கண்டுபிடிக்க, இந்த வழக்கு போலீஸ் அதிகாரி பிரஜினிடம் வருகிறது. இவானாவை மையமாக வைத்து விசாரணையை தொடங்கும் பிரஜின், அவரையே காதலிக்க தொடங்குகிறார். இறுதியில் பிரஜின் வாழ்க்கை என்ன ஆனது? இந்த தொடர் கொலைகளுக்கு பின்னால் இருப்பது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரஜின், கம்பீரமான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாகவும், காதலராகவும் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் இவானா வருண், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை தன்னால் முடிந்தவரை குறையில்லாமல் கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் எம்.கே.சாம்பசிவம், அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி, அனுபமா குமார், அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லருக்கான பரபரப்புடன் காட்சிகளை படமாக்கினாலும், காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். ஹரி.எஸ்.ஆர் இசையமைப்பில் காதல் பாடல்கள் நெஞ்சை வருடும் விதத்தில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்கிறது. படத்தொகுப்பாளர்கள் இக்னேஷியஸ் அஸ்வின் மற்றுய்ம் சதீஷ் குரோசாவா, காட்சிகளை நேர்த்தியாக தொகுத்து படத்தை தொய்வின்றி நகர்த்தி சென்றிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் ராவணன், தொடர் கொலைகள் என்ற வழக்கமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியிலான கதைக்கருவுக்கு, மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, யூகிக்க முடியாத திருப்பங்கள் மூலம் படத்தை பரபரப்பாக நகர்த்தி செல்கிறார். பார்வையாளர்களுக்கு சில கதாபாத்திரங்கள் மீது சந்தேகம் ஏற்படும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் சந்தோஷ் ராவணன், கிளைமாக்ஸ் நெருங்கும் போது, எதிர்பார்க்காத திருப்பம் மூலம் யூகங்களை உடைத்தெறிந்து வியக்க வைக்கிறார். நாயகியின் வீட்டில் இருக்கும் இளைஞர் யார் ? என்பதை விவரிக்காதது லாஜிக் மீறலாக இருந்தாலும், படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் சந்தோஷ் ராவணன், கிளைமாக்ஸ் வரை அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்புடனும், விறுவிறுப்புடனும் படத்தை நகர்த்தி சென்று, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பட விரும்பிகளை முழுமையாக திருப்திப்படுத்தியிருக்கிறார்.
